அரியானா: பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி


அரியானா: பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 11 April 2024 6:27 AM GMT (Updated: 11 April 2024 6:59 AM GMT)

பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் பல மாணவர்கள் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிகார்,

அரியானா மாநிலம் நர்னால் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் வாகனம் எப்போதும் போல இன்று காலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனம் உன்ஹானி கிராமம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பல பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

"நர்னால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் வாகனம் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் பல பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில் டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. மேலும் இன்று ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில் இந்த தனியார் பள்ளி இயங்கியதாக கூறப்படுகிறது. பள்ளி வாகனத்திற்கான உரிமம் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.


Next Story