மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி


மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி
x

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் துணிச்சல் இருந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் முடிந்தால் தடுத்து பாருங்கள் எனவும் மேற்கு வங்காளத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்களத்தில் வங்காளதேசத்தை பூர்வீமாக கொண்ட மாதுவாஸ் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பாஜக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை நாம் விவாதித்துள்ளோம். இந்த சட்டம் மேற்கு வங்காளத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். துணிச்சல் இருந்தால் நீங்கள் (மம்தா பானர்ஜி) தடுத்து பாருங்கள். உரிய ஆவணங்களுடன் வசிக்கும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று சிஏஏ சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக இருந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயின் சமூகத்தினர், பார்சி மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் அனுமதிக்கிறது. எனினும், இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்கான விதிகள் எதுவும் அரசாங்கம் முறையாக வகுக்காததால், இந்த சட்டத்தின் கீழ் யாருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை.


Next Story