இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு


இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த சேர்ந்த அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை, அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது:

"இலவசங்களை நிறுத்த எந்த கட்சியும் நினைக்கவில்லை. இந்த விவகாரத்தில் நீண்ட விவாதம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. வரியாக செலுத்தப்படும் பணம் வளர்ச்சி போன்ற நோக்கங்களுக்காக செலுத்தப்படவில்லை என அனைவரும் நினைக்கின்றனர்.

ஒவ்வொரு கட்சியும் இலவசங்களால் பயனடைகிறது. இலவசங்களை எதிர்ப்பவர்கள், அதனை தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், நிதி கமிஷன், தேர்தல் கமிஷன், சட்ட கமிஷன் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்."

இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

இலவசங்கள் குறித்து ஆராய கோர்ட்டு மூலம் அமைக்கப்படும் நிபுணர் குழு குறித்து ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபில் மற்றும் மனுதாரர் தங்கள் யோசனைகளை அடுத்த 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு தலைமை நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.


Next Story