அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா; இந்தியா கடும் கண்டனம்


அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா; இந்தியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 4 April 2023 6:43 AM GMT (Updated: 4 April 2023 7:00 AM GMT)

அருணாசல பிரதேச மாநிலம் ஆனது தெற்கு திபெத் என கூறி 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது.

இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. இதற்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.

சீனாவின் ஆத்திரமூட்டும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட செய்தியில், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்றளவும் உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வருங்காலத்திலும் எப்போதும் இதே நிலை தொடரும் என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற அறிக்கைகளை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது இது முதன்முறையல்ல. இதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் மறுக்கிறோம். இந்தியாவில் இருந்து பறிக்கப்பட முடியாத பகுதியாக அது நீடிக்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டும் முயற்சியால், இந்த உண்மையை மாற்ற முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தில் உள்ள 6 பகுதிகளுக்கு இவ்வாறு சீனா பெயர் சூட்டியிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டும் இதேபோன்று, அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

அந்த வகையில் அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டது. திபெத்தின் தெற்கு பகுதி தங்களின் உள்ளார்ந்த பகுதி என்றும் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஜி-20 கூட்டம் ஒன்று நடந்தது.

இதில் சீனா பங்கேற்கவில்லை. இதற்கான காரணமும் சீன அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.


Next Story