மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தகவல்கள் சேகரிப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தகவல்கள் சேகரிப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:47 PM GMT)

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா:

15 நாட்கள் சிகிச்சை

கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று சிவமொக்காவுக்கு வந்தார். அப்போது நிருபர்கள், மங்களுரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக், பலத்த தீக்காயம் அடைந்துள்ளார். அவருக்கு 8 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாட்கள் ஷாரிக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவர் குணமான பிறகே குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடத்த முடியும்.

முக்கிய தகவல்கள்

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. இதுவரை பல்வேறு முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து விசாரித்து வருகிறோம். விசாரணை நடந்து வருவதால், இதுபற்றி வேறு எதுவும் கூற முடியாது.

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிலரை விசாரித்து திருப்பி அனுப்பி உள்ளோம். பெல்தங்கடி வனப்பகுதியில் சாட்டிலைட் போன் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சாட்டிலைட் போனை பயங்கரவாதிகள் உபயோகப்படுத்தியது இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story