சுப்ரீம்கோர்ட்டுக்கு 5 நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் பரிந்துரை


சுப்ரீம்கோர்ட்டுக்கு 5 நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் பரிந்துரை
x

சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பணியமர்த்துவதற்காக ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் 5 நீதிபதிகளின் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாக இன்று தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனையின் முடிவில், பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் 5 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கும். ஒரு இடம் மட்டுமே காலியாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story