வீர சாவர்க்கர் குறித்த கருத்து: ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்


வீர சாவர்க்கர் குறித்த கருத்து: ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
x

வீர சாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தற்போது மராட்டியத்தில் பயணிக்கிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில்,சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகா சபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயேர்களுக்கு உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து கருணை மனு கொடுத்ததாகவும் கூறிய ராகுல்காந்தி அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார்.

ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறியதாவது:-

நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல்காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல்காந்தி சொல்வது பொய்யா என சோனியாகாந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக்கொண்டிருப்பதாகவும் சம்பிட் பாத்ரா காட்டமாக தெரிவித்தார்.

மேலும் வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என சம்பிட் பாத்ரா கூறினார்.


Next Story