காங்கிரசுக்கு பொம்மை தலைவர் வேண்டாம் - பிரிதிவிராஜ் சவான்


காங்கிரசுக்கு பொம்மை தலைவர் வேண்டாம் - பிரிதிவிராஜ் சவான்
x

காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்க கூடாது என்றும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்றும் பிரிதிவிராஜ் சவான் கூறினார்.

துரதிருஷ்டவசமானது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகினார். இது பற்றி மராட்டியத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவானிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

காங்கிரசில் இருந்து மூத்த தலைவர்கள் வெளியேறி வருவது துரதிருஷ்டவசமானது. குலாம் நபி ஆசாத் கட்சியின் பிரபலமான தலைவர் மற்றும் மதசார்பற்ற தலைவர்.

மூத்த தலைவர்களான நாங்கள் கடந்த 2020-ம் ஆண்டில் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினோம். அதில் கட்சியின் உள்சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் அது நடக்கவில்லை.

பொம்மை தலைவர்

கடந்த 24 ஆண்டாக காங்கிரசில் அமைப்பு தேர்தல் நடத்தப்படவில்லை. காங்கிரசுக்கு பொம்மை தலைவர் இருக்கக்கூடாது. அவர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாற்று தலைவரை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வரவில்லை என்றால், அது கட்சியில் வரலாற்று தவறாகி விடும். 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில், கட்சியில் தற்போதைய நிலை நீடிப்பது சரியாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story