உலகளாவிய காரணிகளால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது - நிர்மலா சீதாராமன்

Image Courtesy : ANI
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய உலகளாவிய காரணிகள் தான் காரணம் என அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "ரஷ்யா-உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய முக்கியக் காரணம் என தெரிவித்தார்.
மேலும் அவர் "பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட பலவீனமடைந்துள்ளன. எனவே, 2022 இல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலிமையாக இருக்கிறது" என தெரிவித்தார்.






