அவதூறு வழக்கு; இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் கோர்ட்டில் தள்ளுபடி


அவதூறு வழக்கு; இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 20 April 2023 6:09 AM GMT (Updated: 20 April 2023 8:04 AM GMT)

அவதூறு வழக்கு ஒன்றில் இடைக்கால தடை விதிக்கும்படி தாக்கல் செய்த ராகுல் காந்தியின் மனுவை சூரத் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி? என்ற வகையில் பேசினார் என தகவல்கள் வெளிவந்து சர்ச்சை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததில், ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.

எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்ததுடன், ஜாமீன் வழங்கியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை அடுத்து ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் கடந்த 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்ததில், அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். அத்துடன் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ந்தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

அதன்படி 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு (20-ந்தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில், இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனுவை சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் இடைக்கால தடை கிடைப்பது, ராகுல் காந்தி மீண்டும் மக்களவை எம்.பி.யாவதற்கு வழிவகை செய்யும். இந்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.


Next Story