திகார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.


திகார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.
x
தினத்தந்தி 11 April 2024 10:21 AM GMT (Updated: 11 April 2024 12:20 PM GMT)

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

புதுடெல்லி,

மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.ஐ .அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமும் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் திகார் சிறையில் இருக்கும் கே.கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணை நடத்தியது தொடர்பாக கே.கவிதா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சி.பி.ஐ.,-யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரை பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், நான் பாதிக்கப்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. என்னுடைய டெலிபோன் அனைத்து டி.வி. சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து போன்களையும் ஒப்படைப்பேன்.

இவ்வாறு கே.கவிதா அதில் தெரிவித்துள்ளார்.


Next Story