2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் - பிரதமர் மோடி


2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 18 Aug 2023 11:45 PM GMT (Updated: 18 Aug 2023 11:45 PM GMT)

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஒவ்வொரு கிராமம், தாலுகா, மாவட்டத்தையும் வளர்ச்சி அடைய செய்யுங்கள் என்று பா.ஜனதா உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மாநாடு, தாதர்-நகர் ஹவேலியில் நடந்தது. அதில், பா.ஜனதா தலைவர் நட்டா கலந்து கொண்டார்.

மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது:-

நான் பிரதமர் ஆனவுடன், ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித்தருவதையும், வங்கிக்கணக்கு தொடங்குவதையும் முன்னுரிமை கொடுத்து செய்தேன்.

அதுபோல், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், தங்கள் கிராமம் மற்றும் மாவட்டத்துக்கு சில பணிகளை எடுத்துச் செய்ய வேண்டும். மக்கள் ஆதரவுடன் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.

பா.ஜனதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஆண்டுதோறும் 3 திட்டங்களை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சிகளுக்கான நிதிஒதுக்கீடு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, நிதி ஒரு பிரச்சினையே அல்ல.

ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்த உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு, தற்போது ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 30 ஆயிரம் மாவட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டித் தந்துள்ளோம்.

'அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி' என்பது பா.ஜனதாவுக்கு வெறும் கோஷம் அல்ல. அதனுடன் ஒவ்வொரு தருணமும் வாழ வேண்டும்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமம் தாலுகா மாவட்டம் ஆகியவற்றை வளர்ச்சியடைய செய்தால்தான் இதை சாதிக்க முடியும். வளர்ச்சி திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

கைவினை தொழிலாளர்களுக்காக 'விஸ்வகர்மா' திட்டம், செப்டம்பர் 17-ந் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படுகிறது. பா.ஜனதா உள்ளாட்சி நிர்வாகிகள், தங்கள் பகுதியில் உள்ள கைவினை ெதாழிலாளர்கள் இத்திட்டத்தில் பலனடைய உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story