உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை கிடுகிடுவென உயர்வு


உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை கிடுகிடுவென உயர்வு
x
தினத்தந்தி 15 March 2023 5:15 AM GMT (Updated: 15 March 2023 5:17 AM GMT)

உற்பத்திகுறைவால் கர்நாடகத்தில் வெற்றிலை விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு வெற்றிலை ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிக்கமகளூரு-

உற்பத்திகுறைவால் கர்நாடகத்தில் வெற்றிலை விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு வெற்றிலை ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெற்றிலை

திருமணம் உள்பட எந்த சுப காரியங்களாக இருந்தாலும், அதில் முக்கிய பங்கு வகிப்பது வெற்றிலைதான். இந்த வெற்றிலை மருத்துவ குணம் கொண்டது மட்டுமின்றி, நல்ல காரியங்களை நடக்கும்போது, இதற்கு முக்கியத்துவம் வழங்குவது உண்டு. மார்க்கெட்டுகளில் குைறந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், இதற்கான மதிப்பு தனித்தான்.

அது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெற்றிலை விலை உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. குறிப்பாக தாவணகெரேவில் உற்பத்தியாகும் வெற்றிலையில் விலை அதிகரித்திருப்பது, வியாபாரிகளையே வியக்க வைத்துள்ளது.

ஹரிஹராவில் உற்பத்தி

தாவணகெரே மாவட்டம் ஹரிஹாரா பகுதியில் வெற்றிலை உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்கு இருந்துதான் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெற்றிலை உற்பத்தி குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வெற்றிலையின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதாவது ஒரு ரூபாயிற்கு 4, 5 வெற்றிலை வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு வெற்றிலை ரூ.1.60 முதல் ரூ.2 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஒரு கட்டு (100 வெற்றிலை) ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. தாவணகெரே மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் இந்த வெற்றிலை பாக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு ரூபாயிற்கு வெற்றிலை வாங்கி விடலாம். ஆனால் இப்போது ஒரு ரூபாயிற்கு வெற்றிலை கிடைப்பது இல்லை. ரூ.5 கொடுத்தால் 2 அல்லது 3 வெற்றிலைத்தான் கிடைக்கிறது. இதனால் சுபகாரியங்கள் நடத்துபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் கவலை

இது குறித்து விவசாயி மகேஷ் என்பவர் கூறும்போது:-

தாவணகெரே மாவட்டம் ஹரிஹராதான் வெற்றிலை உற்பத்தியில் முதல் இடம். இதற்கு அடுத்தப்படியாகத்தான் தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி. அங்கிருந்து கர்நாடகத்திற்கு வெற்றிலைகள் வருகிறது. இருப்பினும் நம்ம ஊரு வெற்றிலைக்கு தனி மவுசு. கடந்த சில மாதங்களாக வறட்சி மற்றும் அதிக மழை பொழிவு என்று வெற்றிலை உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக வெற்றிலையின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பழைய நிலைக்கு வெற்றிலை விலை குறையவேண்டும் என்றால் அதற்கு சில மாதங்கள் ஆகும். இதனால் வெற்றிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. இந்த வெற்றிலையை எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகர்களுக்குதான் அதிகளவு லாபம் இருக்கிறது. இருப்பினும் விவசாயிகள் தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. தொடர்ந்து வெற்றிலையை உற்பத்தி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story