நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு: தேர்தல் ஆணையம்


நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு: தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 15 March 2024 5:39 AM GMT (Updated: 15 March 2024 10:26 AM GMT)

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. நாளை பிற்பகல் மூன்று மணிக்கு தேர்தல் கால அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும்.

அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும். மக்களவைத் தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பா.ஜ.க. இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் 82 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப் படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.


Next Story