ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை: மத்திய பிரதேச முதல்-மந்திரி பேச்சு


ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை: மத்திய பிரதேச முதல்-மந்திரி பேச்சு
x

ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை ஆகும் என மத்திய பிரதேச முதல்-மந்திரி இன்று பேசியுள்ளார்.

ஜபல்பூர்,

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதன்படி, இந்த ஆண்டு 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் காலை முதலே யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திரை துறை, விளையாட்டு துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச யோகா தினத்திற்கான தேசிய நிகழ்ச்சி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், மத்திய மந்திரிகள் பிரகலாத் சிங் பட்டேல், சர்பானந்தா சோனோவால், மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் பட்டேல் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசும்போது, நாம் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடி வருகிறோம். இதற்கான தேசிய அளவிலான நிகழ்ச்சி ஜபல்பூரில் நடத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ஒட்டு மொத்த உலகமும் யோகாவின் தாக்கத்தில் உள்ளது.

யோகா முறையானது உலக நலனுக்கானது. உலகத்தின் நலன் ஆனது, இந்தியாவின் முக்கிய மந்திரம் ஆகும். முதல் மகிழ்ச்சியானது, ஒரு சுகாதாரமிக்க உடலே ஆகும். அதற்கு யோகாவை விட சிறந்தது ஒன்றும் இல்லை. யோகா தினத்தன்று என்றில்லாமல், ஒவ்வொரு நாளும் நாம் யோகா செய்வது அவசியம்.

ஆரோக்கியமுடன் இருப்பது கூட நாட்டுக்கு செய்யும் பெரிய சேவை ஆகும். உடல்நலம் குன்றியிருக்கும்போது, நாம் நாட்டுக்கு ஒரு சுமையாக மாறுகிறோம் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story