ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு


ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு
x

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று முன்னாள் ராணுவ தளபதி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

சண்டிகர்,

ராகுல்காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் அவருடன் இணைந்து கொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது. கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பாரத் ஜோடோ யாத்திரை அரியானா வழியாக சென்ற நிலையில் தற்போது மீண்டும் யாத்திரை அரியானாவுக்குள் நுழைந்துள்ளது.

கடும் குளிர், அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில், கர்னாலின் நிலோகேரி பகுதியில் உள்ள தோட்வாவிலிருந்து இன்று காலை பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. பின்னர் குருஷேத்ரா மாவட்டத்திற்குள் நுழைந்தது. இந்த யாத்திரையின் போது, பல காங்கிரஸ் ஆதரவாளர்கள் சட்டையின்றி நடனமாடுவதைக் காண முடிந்தது.

கட்சியின் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் குமாரி செல்ஜா ஆகியோர் யாத்திரையில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இன்று பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர், லெப்டினன்ட் ஜெனரல் ஆர் கே ஹூடா, லெப்டினன்ட் ஜெனரல் விகே நருலா, ஏஎம் பிஎஸ் பாங்கு, மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் சவுத்ரி, மேஜர் ஜெனரல் தர்மேந்தர் சிங், கர்னல் ஜிதேந்தர் கில், கர்னல் புஷ்பேந்தர் சிங் லெப்டினன்ட் ஜெனரல் டிடிஎஸ் சந்து, மேஜர் ஜெனரல் பிசம்பர் தயாள் மற்றும் கர்னல் ரோஹித் சவுத்ரி ஆகியோர் ராகுல் காந்தியுடன் இணைந்து கொண்டனர். இதனை காங்கிரஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



Next Story