முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மலர் தூவி மரியாதை


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள்:  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மலர் தூவி மரியாதை
x
தினத்தந்தி 16 Aug 2022 2:57 AM GMT (Updated: 16 Aug 2022 3:31 AM GMT)

டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது நினைவு நாளை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


புதுடெல்லி,



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்த பெருமைக்கு உரியவர். கடந்த 1996-ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற அவரது ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர், 1998 முதல் 1999 வரையிலான 13 மாதங்களுக்கு மீண்டும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இதன் பின்பு 3-வது முறையாக 1999-ம் ஆண்டு பிரதமர் பதவியேற்ற வாஜ்பாய் தனது பதவி காலம் முழுவதும் நிறைவு செய்துள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி தனது 93 வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில், நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமீதா கவுல் பட்டாச்சார்யாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story