கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது - பீலே மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல்


கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது - பீலே மறைவிற்கு ராகுல்காந்தி இரங்கல்
x

கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது - பீலே மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்

பிரேசிலா,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது.

மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது. பீலே அரிய வகை விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்தார். களத்திலும் வெளியேயும் ஒரு ஜாம்பவான். அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.


Next Story