பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி போராட்டம்


பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2023 5:15 AM GMT (Updated: 15 March 2023 5:17 AM GMT)

சிக்கமகளூருவில் பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி போராட்டம் நடத்தினார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவை சேர்ந்தவர் மஞ்சுநாத். விவசாயி. இவர் மாநில விவசாயிகள் சங்கத் துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் தனது நிலத்திற்கு பட்டா வாங்குவதற்கு கிராம பஞ்சாயத்து மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வந்தார். ஆனால் பட்டா கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மஞ்சுநாத் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதன்படி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், பாய் தலையணையுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சிலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் விவசாயி மஞ்சுநாத் கூறியதாவது:-

மூடிகெரேவில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா வழங்கும்படி கிராம பஞ்சாயத்து அதிகாரி மற்றும் தாசில்தாரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். மாவட்ட கலெக்டர் இதற்கு நல்ல முடிவை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். இ்ல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியரிடம் தனது கோரிக்கை குறித்த மனுவை வழங்கினார். அதை பெற்று கொண்ட அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story