இந்தியா கூட்டணியில் "முதல்" விரிசல்..


இந்தியா கூட்டணியில் முதல் விரிசல்..
x
தினத்தந்தி 20 Sep 2023 5:39 AM GMT (Updated: 20 Sep 2023 5:55 AM GMT)

எதிர் கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து சிபிஎம் கட்சி விலகியது.

டெல்லி,

தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணியை எதிர் கொள்வதற்காக பல்வேறு எதிர்கட்சிகளை கொண்ட கூட்டணியை காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கின. இந்த கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இருந்தன. இதற்கு எதிர்கட்சிகள் ' இந்தியா ' என பெயரிட்டுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் 23 ல் பீகாரின் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் ஜூலை 19 ல் பெங்களூருவிலும் மற்றும் மூன்றாவது கூட்டம் செப்டம்பர் 1ல் மும்பையிலும் நடைபெற்றன.

இந்த மூன்று கூட்டங்களிலும் சிபிஎம் கட்சி கலந்து கொண்டது. இந்நிலையில் தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவானது செப்டம்பர் 17 ல் டெல்லியில் நடந்த சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாது. தேர்தலுக்கு பின்னர் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க கூட்டணிக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றன. மேலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கிடையே மோதல் போக்குகள் தொடர்ந்துவருகின்றன. தற்போது கேரளாவில் தொகுதி பங்கீடு பற்றிய கேள்விக்கு கேரள மாநில சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story