காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி


காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
x

எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவம், போலீசார் இணைந்து நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது குப்வாராவின் ஜுமஹண்ட் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அதிரடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே மோதல் நீடித்த நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட தகவலில் உறுதியாகியுள்ளது.


Next Story