அச்சன்கோவில் அருகே அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஒருவர் உயிரிழப்பு


அச்சன்கோவில் அருகே அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஒருவர் உயிரிழப்பு
x

மலைப்பகுதிகளில் பெய்த மழையால் கும்பா உருட்டி அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

தமிழ்நாடு- கேரள எல்லையான அச்சன்கோவில் அருகே கும்பா உருட்டி அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் சுமார் 250 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அந்த சமயத்தில் அருவியின் அழகை காணவும், அதில் குளிக்கவும் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்தநிலையில் விடுமுறைதினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்துக் கொண்டு இருந்தனர். மாலை மணி 3.30 அளவில் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் மதுரையை சேர்ந்த குமரன் (வயது50) என்பவர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்து புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதே சமயத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாறைகளுக்கு இடையே மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ஆலயங்காவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story