வாடகை வீட்டில் உல்லாசம்: திருமணத்திற்கு வற்புறுத்திய காதலிக்கு கத்திக்குத்து - பரபரப்பு தகவல்


வாடகை வீட்டில் உல்லாசம்: திருமணத்திற்கு வற்புறுத்திய காதலிக்கு கத்திக்குத்து - பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 15 April 2024 11:15 AM GMT (Updated: 15 April 2024 12:10 PM GMT)

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாடகை வீட்டில் கணவன் - மனைவிபோல் வசித்து வந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பண்டேபாளையாவை சேர்ந்தவர் ஆதித்யா சிங்(வயது 27). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தினமும் அவர் அந்த பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கம். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம்பெண் ஒருவரும் வந்துள்ளார். அவருடன் ஆதித்யா சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து கணவன் - மனைவிபோல் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆதித்யா சிங், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக, அந்த பெண்ணை விட்டு ஆதித்யா சிங் விலக தொடங்கி உள்ளார். இதனால் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஆதித்யா சிங் மறுத்துள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்றும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அந்த பெண்ணுக்கும், ஆதித்யா சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது காதலியை, ஆதித்யா சிங் சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த இளம்பெண் உயிருக்கு போராடினார். உடனே ஆதித்யா சிங் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது அவர் திருமணத்திற்கு மறுத்ததும், இதுதொடர்பான வாக்குவாதத்தில் காதலி மீது ஆதித்யா சிங் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story