பசு கடத்தல் விவகாரம்.. ராஜஸ்தானில் வாகனத்தை வழிமறித்து 4 பேரை அடித்து உதைத்த மக்கள்


பசு கடத்தல் விவகாரம்.. ராஜஸ்தானில் வாகனத்தை வழிமறித்து 4 பேரை அடித்து உதைத்த மக்கள்
x

தாக்குதலுக்குள்ளான 4 பேரும், அரியானாவில் இருந்து பசுக்களை கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், குஷேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று பசுக்களை ஏற்றி வந்த ஒரு வாகனத்தை உள்ளூரைச் சேர்ந்த சிலர் வழிமறித்துள்ளனர். வாகனத்தில் வந்த 4 பேரிடமும், அவர்கள் கொண்டு வந்த பசுக்கள் குறித்து கேட்டபோது, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்களை உள்ளூர் மக்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான 4 பேரும், அரியானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு பசுக்களை கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வாகனத்தில் ஏற்றி வந்த 7 பசுக்கள் மீட்கப்பட்டு, பசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்கப்பட்ட 4 பேரும் அரியானா மாநிலம் நூ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பசு கடத்தல் புகார் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story