காதலிகளுடன் நண்பர்கள் அதிக நேரம் செலவிட... விமானத்திற்கு வெடிகுண்டு புரளி விடுத்த நபர்


காதலிகளுடன் நண்பர்கள் அதிக நேரம் செலவிட... விமானத்திற்கு வெடிகுண்டு புரளி விடுத்த நபர்
x

காதலிகளுடன் தனது நண்பர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக புறப்பட தயாராக இருந்த விமானத்திற்கு நபர் ஒருவர் வெடிகுண்டு புரளி விடுத்து உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே நகருக்கு புறப்பட தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தயாரானது. இந்நிலையில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என தகவல் சென்றுள்ளது.

இதனால், பரபரப்படைந்த அதிகாரிகள் விமானத்தில் சோதனையிட்டு உள்ளனர். 182 பயணிகளையும், கீழே இறக்கி விட்டு தனியாக கொண்டு செல்லப்பட்டு விமான சோதனை நடந்தது. ஆனால் இதில், வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தியதில், துவாரகா நகரை சேர்ந்த அபினவ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், 7 மாதங்களாக பிரிட்டிஷ் ஏர்வேசில் டிக்கெட் ஏஜெண்டு பணியில் பயிற்சி பெறுபவராக இருந்து வந்ததும் தெரிய வந்தது.

இவரிடம் விசாரித்ததில், அபினவுக்கு ராகேஷ் மற்றும் குணால் ஷெராவத் என இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சமீபத்தில் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சென்ற இடத்தில் இரண்டு இளம்பெண்களுடன் நட்பு ஏற்பட்டு உள்ளது.

இதன்பின் அவர்கள் இருவரும், புனே நகருக்கு புறப்பட தயாராக இருந்தனர். இதற்காக தனியார் விமானத்தில் ஏறினர். ஆனால், அவர்களுடன் அதிக நேரம் செலவிட அபினவ் நண்பர்கள் விரும்பி உள்ளனர்.

இதனால், அவர்களை போக விடாமல் செய்ய என்ன செய்யலாம் என்று 3 பேரும் யோசித்து உள்ளனர். போலியான வெடிகுண்டு புரளியை பரப்பினால், விமானம் ரத்து செய்யப்படும். தனது நண்பர்களால் அவர்களது காதலிகளுடன் அதிக நேரம் செலவிட முடியும் என புது திட்டம் தீட்டி இதனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை நண்பர்களின் காதலிக்கும் அபினவ் தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அவர்களும் குஷியாகி உள்ளனர். ஆனால், அபினவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என தகவல் தெரிந்ததும், அவரது நண்பர்கள் வீட்டை விட்டு தப்பி வெளியேறி விட்டனர். போலீசார் அந்த நண்பர்களை தேடி வருகின்றனர்.


Next Story