பொது சிவில் சட்டம்: மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - பா.சிதம்பரம்


பொது சிவில் சட்டம்: மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - பா.சிதம்பரம்
x
தினத்தந்தி 28 Jun 2023 5:47 AM GMT (Updated: 28 Jun 2023 8:14 AM GMT)

பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுவதால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் போபாலில் நடந்தது.

அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசிய பிரதமர் மோடி,

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஆதரிக்கிறது.

ஆனால், ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள், பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்தவும், முஸ்லிம்களை தூண்டிவிடவும் பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.தங்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடையும் அரசியல் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டில் இவருக்கு ஒரு சட்டம், அவருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த வீட்டை ஒழுங்காக நடத்த முடியுமா? அதுபோல், இரண்டு வகையான சட்டங்கள் இருந்தால் நாட்டை எப்படி நடத்த முடியும்?

அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பொது சிவில் சட்டம் அவசியம்.

எதிர்க்கட்சிகள் எங்களை குற்றம் சாட்டிக்கொண்டே 'முசல்மான் முசல்மான்' என்று உச்சரித்தன. ஆனால், அக்கட்சிகள் உண்மையிலேயே முஸ்லிம்களுக்காக உழைத்திருந்தால், முஸ்லிம் குடும்பங்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருக்காது.'பஸ்மந்தா' முஸ்லிம்களை கூட ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள், சமமாக நடத்தவில்லை. தீண்டத்தகாதவர்களாக கருதுகிறார்கள்.

தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஓட்டுவங்கி அரசியல் காரணமாக, நாடோடி சாதிகள் கண்டுகொள்ளப்படவில்லை.

அதுபோல், 'முத்தலாக்' முறையை ஆதரிப்பவர்கள், முஸ்லிம் மகள்களுக்கு பெரும் அநீதி இழைக்கிறார்கள். 'முத்தலாக்' முறை, எகிப்து நாட்டில் 80 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டது. பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமின் அங்கமாக 'முத்தலாக்' இருந்தால், அந்த நாடுகளில் ஏன் தடை விதிக்கப்பட வேண்டும்? 'முத்தாலாக்' முறை, மகள்களுக்கு அநீதியாக அமைவதுடன் ஒட்டுமொத்த குடும்பமும் சீரழிகிறது. என கூறினார்.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

"பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்தை முன்மொழியும் போது, ஒரு நாட்டையே, ஒரு குடும்பத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். அவரது ஒப்பீடு சரியாகத் தோன்றினாலும், யதார்த்தம் மிகவும் மாறுபட்டது. ஒரு குடும்பம் இரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஒரு நாடு ஒன்றிணைக்கப்படுகிறது.

குடும்பத்திலும் கூட பன்முகத்தன்மை உள்ளது. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது, இந்திய மக்களிடையே காணப்படும் பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது. பொது சிவில் சட்டம், மக்களால் விரும்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதனை அரசாங்கத்தால் மக்களிடம் திணிக்க முடியாது.

பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை எளிமையான ஒன்றாக காட்சிப்படுத்துகிறார். ஆனால் அது சாத்தியமற்றது என்பதை அவர் கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் இந்த பொது சிவில் சட்டத்தால், மேலும் மேலும் பிளவுகள் ஏற்படும்.

பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்து பேசுவது, பணவீக்கம், வேலையின்மை, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது உள்ளிட்டவைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல்; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லாட்சியில் தோல்வியடைந்ததால், அடுத்த தேர்தல்களில் வெற்றி பெற பொது சிவில் சட்டத்தை பாஜக களமிறக்குகிறது என பதிவிட்டுள்ளார்.


Next Story