பண்ட்வாலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் சிக்கினார்


பண்ட்வாலில்  சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

பண்ட்வாலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறாள். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரி முடிந்து சிறுமி அப்பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மர்மநபர் வந்தார். அவர் பஸ்சுக்காக காத்திருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டாள்.

இதையடுத்து மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துரத்தி சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த நபரை பண்ட்வால் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பண்ட்வாலை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பதும், அவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story