மணிப்பூர் வீடியோவை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


மணிப்பூர் வீடியோவை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 July 2023 5:08 AM GMT (Updated: 20 July 2023 5:15 AM GMT)

மணிப்பூர் வீடியோவை நீக்குமாறு சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இணைய தளங்களில் இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைத்தளங்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story