டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் - இந்திய வானிலை மையம்


டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் - இந்திய வானிலை மையம்
x

டெல்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டத்தினால் 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படியும் விபத்துகள் நேரிட்டு வருகின்றன.

இந்தநிலையில், டெல்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டத்தினால் 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, இமாசலபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடும் பனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 2 நாள்களுக்கு ராஜஸ்தான், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், 50 மீட்டர் வரை பார்வை நிலை குறைந்து சாலைப் போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story