இந்தியாவில் விரைவில் ஸ்கைபஸ் அறிமுகமாக வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்


இந்தியாவில் விரைவில் ஸ்கைபஸ் அறிமுகமாக வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்
x

மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் விரைவில் "ஸ்கைபஸ்" எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் ஸ்கைபஸ் சேவை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

"ஸ்கைபஸ்" அறிமுகமாகும் பட்சத்தில் போக்குவரத்து இடையூறு மற்றும் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கலாம். இது குறித்து நிதின் கட்கரி கூறுகையில், "மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க விரும்புகிறோம் " என தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இந்த சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் எரிபொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாக குறைப்பதே தனது கனவு என அவர் தெரிவித்தார். ஸ்கைபஸ் என்பது மெட்ரோவைப் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும், மின்சார சக்தியில் இயங்கும் ஸ்கைபஸ்கள் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியதாகும்.


Next Story