பீகார் பயணம்: ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு ஐ.எஸ்.ஐ., நக்சலைட்டுகள் மிரட்டல்


பீகார் பயணம்: ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு ஐ.எஸ்.ஐ., நக்சலைட்டுகள் மிரட்டல்
x

பீகார் பயணம் மேற்கொள்ள உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு மற்றும் நக்சலைட்டுகளிடம் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.



பாகல்பூர்,


பீகாரின் பாகல்பூர் மாவட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகிற 10-ந்தேதி (நாளை மறுநாள்) பயணம் மேற்கொள்கிறார். மகரிஷி குகைக்கும் அவர் செல்கிறார். மகரிஷியில் உள்ள குப்பாகட் ஆசிரமத்திற்கும் அவர் செல்ல இருக்கிறார்.

இதனை முன்னிட்டு பரமஹன்ச மகாராஜாவின் ஆவண படம் ஒன்றின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பகவத்துக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், மோகன் பகவத்துக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு, நக்சலைட்டுகள் மற்றும் அடிப்படைவாதிகளிடம் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து பாகல்பூர் மாவட்ட நிர்வாகம், போலீசாரை உஷார்படுத்தி உள்ளது. பகவத்தின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு ஆனந்த குமார் மற்றும் சப் டிவிசனல் மாஜிஸ்திரேட் ஆகியோரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பகவத் வரவுள்ள மகரிஷி குகைக்கு சென்று ஆனந்த குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இதுபற்றி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் போக்குவரத்து பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.


Next Story