ஜார்க்கண்ட்: முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில் துப்பாக்கிகள்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்


ஜார்க்கண்ட்: முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில்  துப்பாக்கிகள்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்
x

கோப்புப்படம் 

ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளரான பிரேம் பிரகாஷ் வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ். இவரது வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை தேடிச் சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டக்கள் இருப்பதை கண்ட அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது. அந்த துப்பாக்கிகள் ராஞ்சியை சேர்ந்த 2 போலீசாருக்கு பாதுகாப்பு பணியின் போது வழங்கப்பட்டது என ஆர்கோரா காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 23 அன்று சம்பந்தப்பட்ட அந்த காவலர்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது, ​​​​பிரேம் பிரகாஷின் வீட்டில் ஊழியராக இருந்த தங்களுக்கு தெரிந்த நபரை சந்தித்துள்ளனர். அப்போது மழை பெய்ததால் தங்களிடம் இருந்து துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் அங்கிருந்த ஒரு பீரோவிற்குள் வைத்து பூட்டி விட்டு சாவியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.

மறுநாள் துப்பாக்கிகளை எடுக்க சென்றபோது அந்த வீட்டில் சோதனை நடைபெற்றதை கண்ட அந்த காவலர்கள் அவற்றை எடுக்காமல் திரும்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கூறி இரண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ராஞ்சி காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story