கர்நாடகா: ஐ.டி. நிறுவன மேலாண் இயக்குநர், சி.இ.ஓ.வை படுகொலை செய்த முன்னாள் ஊழியரால் பரபரப்பு


கர்நாடகா:  ஐ.டி. நிறுவன மேலாண் இயக்குநர், சி.இ.ஓ.வை படுகொலை செய்த முன்னாள் ஊழியரால் பரபரப்பு
x

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி. நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை முன்னாள் ஊழியர் ஒருவர் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர் வேறொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பணீந்திர சுப்ரமணியம் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினு குமார் ஆகியோரை அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் உள்ளே புகுந்து ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார்.

இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி வடகிழக்கு பெங்களூரு நகர துணை காவல் ஆணையாளர் லட்சுமி பிரசாத் கூறும்போது, இந்த தாக்குதலை நடத்திய பெலிக்ஸ் என்ற நபரை தேடி வருகிறோம். அந்த நபரும் இதேபோன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அவரது தொழிலில் இந்த இருவரும் தலையிட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பெங்களூருவில் முன்னாள் ஊழியர், நிறுவன உயரதிகாரிகளை படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story