கர்நாடகா: மருமகளை பிடிக்காத மாமியார்; பேரனை கொன்ற அவலம்


கர்நாடகா: மருமகளை பிடிக்காத மாமியார்; பேரனை கொன்ற அவலம்
x

பேரன் ஆத்விக்குக்கு உண்ண தகாத பொருட்களை சரோஜா அடிக்கடி கொடுத்து வந்திருக்கிறார்.

கதக்,

கர்நாடகாவின் கதக் நகரில் கஜேந்திரகத் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வருபவர் சரோஜா கூலி. இவருடைய மருமகள் நாகரத்னா. கடந்த பிப்ரவரியில் இவருக்கு குழந்தை பிறந்தது. ஆத்விக் என்ற பெயரிடப்பட்ட குழந்தையுடன், 6 மாதங்களாக தன்னுடைய பெற்றோர் வீட்டில் நாகரத்னா இருந்துள்ளார்.

அதன்பின்பு, கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய கணவர் வீட்டுக்கு அவர் வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி ஒரு வேலையாக நாகரத்னா வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரது மகனை காணவில்லை. சரோஜாவிடம் கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த நாகரத்னா போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பேரனை கொலை செய்து, அருகேயுள்ள வன பகுதியில் புதைத்து விட்ட அதிர்ச்சி தகவலை சரோஜா தெரிவித்து உள்ளார்.

இதன்பின்னர் போலீசார், ஆத்விக்கின் உடலை வெளியே எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பேரன் ஆத்விக்குக்கு உண்ண தகாத பொருட்களை சரோஜா கொடுத்து வந்தது வழக்கம். ஆனால், இந்த அளவுக்கு சரோஜா செல்வார் என சந்தேகிக்கவில்லை என்று போலீசாரின் விசாரணையின்போது நாகரத்னா கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பின்னரே, இறுதியான முடிவுக்கு வரமுடியும் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story