கர்நாடகா: தட்சிண கன்னடாவில் பா.ஜனதா பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை; 144 தடை உத்தரவு அமல்!


கர்நாடகா: தட்சிண கன்னடாவில் பா.ஜனதா பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை; 144 தடை உத்தரவு அமல்!
x

பா.ஜனதா பிரமுகர் கொலை சம்பவம் பற்றிய தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பெங்களூரூ,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார்(வயது 32). இவர் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

மேலும் இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். தினமும் இவர் காலையில் இறைச்சி கடைக்கு வந்து, மாலையில் வீடு திரும்பிவிடுவார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்றுகாலையில் இவர் வழக்கம்போல் இறைச்சி கடைக்கு வந்தார்.

இரவு வரை கடையிலேயே இருந்த அவர், இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரவீனை சரமாரியாக வெட்டினர். அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.இதனால் கொதிப்படைந்த பா.ஜனதாவினர் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபா, சுள்ளியா, புத்தூர் ஆகிய தாலுகாக்களில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்படி அந்த தாலுகாக்களில் முழு அடைப்பு நடந்தது.

மேலும் பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று சுள்ளியாவில் பா.ஜனதாவினர், விசுவ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுள்ளியா, கடபா, புத்தூர் தாலுகாக்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரவீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து அவரது உடல், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரவீனின் உடலை எடுத்துச் செல்ல முயன்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆம்புலன்சை நகர விடாமல் இந்து அமைப்பினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் பிரவீனின் சாவுக்குநியாயம் வேண்டும் என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டனர்.கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சூழ்நிலையும்மோசமடைந்தது. இதையடுத்து போலீசார் கூட்டத்தினரை நோக்கி ஆம்புலன்சுக்கு வழிவிடும்படி எச்சரித்தனர்.

ஆனால் யாரும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் கோஷமிட்டபடி இருந்தனர். மேலும் அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். கண்ணாடிகளைஅடித்து நொறுக்கினர். போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது.

தொடர்ந்து பரபரப்பும், பதற்றமும் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அப்பகுதியில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டங்களிலும் சிறப்பு படையினர், அதிரடி படையினர், கமாண்டோபடையினர் என ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story