டெல்லி அரசின் அதிகார குறைப்பு அவசர சட்ட விவகாரம்: சரத் பவாருடன் இன்று கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரை சந்திக்கிறார்.
டெல்லி அரசின் அதிகார குறைப்பு அவசர சட்ட விவகாரம்: சரத் பவாருடன் இன்று கெஜ்ரிவால் சந்திப்பு
Published on

மும்பை,

டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரை சந்திக்கிறார்.

டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இதுபற்றிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த வாரம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது. இதனால் கொதிப்படைந்த ஆம் ஆத்மி மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல்லாத கட்சி தலைவர்களை சந்தித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்டார். நேற்று முன்தினம் மேற்கு வங்காளம் சென்று அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார். அப்போது மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி உறுதி அளித்தார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார். இதற்காக கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி நிர்வகிகள் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மும்பை வருகை தந்து இருந்தனர்.

அதேபோல், நேற்று மராட்டிய முன்னாள் முதல்வர் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசியிருந்தார்.

பின்னர் தாக்கரே கூறியது பின்வருமாறு,"ஜனநாயகத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முக்கியமானது என்றும் அதனை மதிக்காத மத்திய அரசை எதிர்த்து நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்" என்றார். இந்த நிலையில் சரத் பவாரை அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com