கேரளா: கல்லூரி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கைகள் சேதம் - மாணவ, மாணவிகள் விநோத போராட்டம்...!

கேரளாவில் கல்லூரி அருகே இருந்த பயணிகள் நிழற்குடை இருக்கைகளை சேதப்படுத்தியதை கண்டித்து மாணவ, மாணவிகள் விநோத போராட்டம் நடத்தினர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரி அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதில் பயணிகள் அமர வசதியாக இருக்கை போடப்பட்டு இருந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி அங்கு வந்த மர்மநபர்கள் இருக்கையை சேதப்படுத்தி உள்ளனர்.
மறுநாள் காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் நிழற்குடை இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். மேலும், இந்த செயலை கண்டிக்கும் விதமாக மாணவ-மாணவிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, சேதமடைந்த இருக்கையில் மாணவ-மாணவிகள் சேர்ந்து அமர்ந்து இருந்தபடி தங்களது எதிர்ப்பை புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






