இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்தது ஏன்?; குமாரசாமி கேள்வி


இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்தது ஏன்?; குமாரசாமி கேள்வி
x

இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் ெசன்னப்பட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சூத்திரம் வகுக்கப்படவில்லை

கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இத்தகைய காலத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து இடர்பாட்டு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த சூத்திரம் வகுக்கப்படவில்லை. இதை வகுக்க வேண்டியவர்கள் யார்?, இந்த விஷயத்தில் கர்நாடகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த அரசு யோசிக்கவில்லை. இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டது ஏன்?.

காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தேவலோகத்தில் இருந்து குதித்து வந்துள்ளனரா?. அவர்கள் நம்மால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தானே?. அவர்கள் நமது மாநில மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

அனைவருக்கும் தெரியும்

டெல்லியில் நடைபெறும் காவிரி குறித்த கூட்டங்களுக்கு கர்நாடக அதிகாரிகள் நேரடியாக செல்லாமல் இங்கேயே அமர்ந்து காணொலி மூலம் கலந்து கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த 15 அதிகாரிகள் அந்த கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்குமா?.

காவிரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்த தகவல்களை கூறவே முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் இரவோடு இரவாக டெல்லி சென்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, கர்நாடகத்தில் நிலவும் உண்மை நிலை குறித்து எடுத்துக்கூற வேண்டும். இதை விடுத்து அரசு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. இன்னொருபுறம் தமிழகத்திற்கு காவிரி நீர் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story