சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தீக்குளித்த சாமியார் உயிரிழப்பு


சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தீக்குளித்த சாமியார் உயிரிழப்பு
x

சட்டவிரோத சுரங்கங்களை மூடவேண்டுமென 550 நாட்களாக சாமியார் போராட்டம் நடத்தியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து கனிமங்கள், மணல் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, இந்த சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் அமைந்துள்ள பகுதி இந்து மத கடவுள் கிருஷ்ணர் சிறுவயதில் விளையாடிய பகுதி எனவும் இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத சுரங்கங்களை மூடவேண்டுமெனவும் கடண்டஹ் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் விஜய் ராகவ் தாஸ் என்ற சாமியார் பசோபா என்ற கிராமத்தில் போராட்டத்தை தொடங்கினார். பல மாதங்களாக அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் 550-வது நாளான கடந்த 20-ம் தேதி சாமியார் விஜய் ராகவ் தாஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்தார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் கடுமையான தீக்காயங்கள் அடைந்த சாமியார் விஜய் ராகவ் தாசை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடும் தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து சாமியார் ராஜஸ்தானில் இருந்து டெல்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சாமியார் ராகவ் தாஸ் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த சாமியார் விஜய் ராகவ் தாசின் உடல் அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பர்சானா பகுதியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.


Next Story