சோப்ராஜ் போன்றவர்களை வெளியே விடுவது சமூகத்திற்கு ஆபத்து: முன்னாள் காவல் உயரதிகாரி பேட்டி


சோப்ராஜ் போன்றவர்களை வெளியே விடுவது சமூகத்திற்கு ஆபத்து: முன்னாள் காவல் உயரதிகாரி பேட்டி
x

சோப்ராஜ் போன்ற நபர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையை விட்டு வெளியே வர கூடாது என்று ஓய்வு பெற்ற முன்னாள் காவல் உயரதிகாரி பேட்டியில் கூறியுள்ளார்.



புனே,


இந்திய வம்சாவளியான 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ் நேபாளத்தில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய மற்றும் வியட்னாம் நாடுகளை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர், ஆசியாவில் 1970-ம் ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரர் என அறியப்பட்டவர். அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் என்றும் அழைக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்தது மற்றும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது ஆகியவற்றுக்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

ஹாங்காங் நாட்டில் இருந்து போலி அடையாளத்துடன் நேபாள நாட்டுக்கு சென்ற சோப்ராஜ், தலைநகர் காத்மண்டுவில் கேசினோ ஒன்றில் வைத்து 30 ஆண்டுகளுக்கு முன்பு, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க குடிமகனான கான்னி ஜோ போரோன்ஜிக் (வயது 29) மற்றும் அவரது கனடா நாட்டு காதலியான லாரண்ட் கேரியர் (வயது 26) ஆகிய இருவரை படுகொலை செய்ததற்காக வெவ்வேறு நாடுகளில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து நேபாள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையானது அடுத்த ஆண்டு செப்டம்பர் 18 உடன் நிறைவுக்கு வரும். எனினும், நேபாள நாட்டு சட்டத்தின்படி, 75 சதவீதம் தண்டனையை நிறைவு செய்த மற்றும் சிறைவாசத்தின்போது, நல்ல முறையில் நடந்து கொண்டவர் என்ற அடிப்படையில் ஒருவரை சிறையில் இருந்து விடுவிக்க இடமுள்ளது.

சோப்ராஜ் முன்பே 95 சதவீதத்திற்கும் கூடுதலாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். வயது முதிர்வு மற்றும் திறந்த நிலையிலான இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு நேபாள நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுவிக்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

மும்பையின் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையாளர் மதுகர் ஜெண்டே. இவர், கடந்த 1986-ம் ஆண்டு தொடர் கொலைகாரரான சோப்ராஜை கைது செய்தவர். அப்போது, தான் சோப்ராஜே இல்லை என கூறி அவர் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவரை போலீசார் கைது செய்து சென்றனர்.

இந்த நிலையில், சோப்ராஜ் விடுதலை என்ற செய்தியை அறிந்தவுடன், அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, சோப்ராஜ் போன்ற கொடூர குற்றவாளிகளை வெளியே விடுவது சமூகத்திற்கு ஆபத்து. சோப்ராஜ் போன்ற நபர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையை விட்டு வெளியே வர கூடாது என்று கூறியுள்ளார்.

சோப்ராஜ் சிறையை விட்டு வெளியே வந்தபின் இன்னும் அதிக அளவிலான குற்றங்களை செய்ய கூடும். 40 முதல் 42 பேரை கொலை செய்த குற்ற செயலை சோப்ராஜ் ஒப்பு கொண்டுள்ளார். அதனால், இதுபோன்ற நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்த பின்பு என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

என்றாலும், குற்ற நீதிமன்ற நடைமுறை என்ன நினைக்கிறது என்பது பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் பொதுமக்களை விட அதிகம் படித்தவர்கள். விடுவிப்பது என்பது அவர்களது முடிவு. அதுபற்றி நாம் விமர்சிப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.


Next Story