வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து நாசம்

வங்காளதேசத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து நாசமடைந்தன.
வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து நாசம்
Published on

டாக்கா,

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது.

கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் கரும்புகையுடன் வானுயுரத்து தீப்பிழம்பு எழுந்தது.

மிகவும் நெரிசலான பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது.

மேலும் இந்த விபத்தில் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com