"அனல் தெறிக்கும் பேச்சு அடிபட்டு போச்சு" நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி "பறக்கும் முத்தம்" மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கடும் கண்டனம்


அனல் தெறிக்கும் பேச்சு அடிபட்டு போச்சு நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பறக்கும் முத்தம்   மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 9 Aug 2023 9:11 AM GMT (Updated: 9 Aug 2023 12:34 PM GMT)

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசி முடித்துவிட்டு ராகுல் காந்தி அவையை விட்டு கிளம்பும்போது, அவை உறுப்பினர்களுக்கு 'பறக்கும் முத்தம்' கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் மக்களவையில் அமளி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முதல் காரச்சார விவாதம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்றும் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றுவிட்டீர்கள். இந்தியாவை கொன்றுவிட்டீர்கள். நீங்கள் துரோகிகள், நீங்கள் தேசபக்தர்கள் இல்லை என ஆவேசமாக பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், பாஜக அரசு இந்தியா என்ற கருத்தோட்டத்தையும், பாரம்பரியத்தையும் அழித்துவிட்டது. ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். இன்று அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி. அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை என மத்திய அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசி முடித்துவிட்டு ராகுல் காந்தி அவையை விட்டு கிளம்பும்போது, அவை உறுப்பினர்களுக்கு 'பறக்கும் முத்தம்' கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியான ஸ்மிருதி இரானியை நோக்கி வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜாகவை சேர்ந்த பெண் எம்.பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.

பாஜக எம்பி ஸ்மிருதி இரானியிடம் பறக்கும் முத்தம் கொடுப்பது போல தகாத சைகை செய்ததாகவும், அவையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் எம்பிக்கள் எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும் போது கூறியதாவது:

"நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேசியவர் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ள போது நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுப்பது பெண் மீது வெறுப்பு கொண்ட நபர் மட்டுமே. இது போன்ற கண்ணியமற்ற நடத்தை இதற்கு முன் இருந்ததில்லை. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் பார்த்தேன்..."

என கூறினார்.


Next Story