மகரஜோதி தரிசனம் காண சபரிமலையில் குவிந்த 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்...


மகரஜோதி தரிசனம் காண சபரிமலையில் குவிந்த 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்...
x

மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இன்று சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.

அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று முன்தினம் வலியகோய்க்கல் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பம்பையில் உள்ள கணபதி கோவிலுக்கு இன்று இந்த ஆபரண பெட்டி வந்தடைந்துள்ளது. அங்கு ஆபரண பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தலைச்சுமையாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த தங்க ஆபரண பெட்டியை சரங்கொத்தி பகுதியில் தேவசம்போர்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்போடு பெற்றுக் கொண்டு, அதனை சபரிமலைக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் ஆபரண பெட்டி 18-ம் படியேறி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அதே சமயம் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி ஜோதியாக காட்சியளிப்பார்.

இந்த மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இன்று சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியே சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதை உள்ளிட்ட பாதைகளில் கூடாரம் அமைத்து அங்கேயே தங்கியுள்ளனர்.

இதனால் சபரிமலையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் வரும் வழியில் கூடாரங்களாக காட்சி அளிக்கிறது. இதில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கியுள்ளனர். அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபரிமலையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




Next Story