மகளை கொன்று, பெண் டாக்டர் தற்கொலை


மகளை கொன்று, பெண் டாக்டர் தற்கொலை
x

பெங்களூருவில் மகளை கொன்றுவிட்டு, பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூருவில் மகளை கொன்றுவிட்டு, பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல் டாக்டர்கள்

பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சைமா(வயது 39). இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் இருந்தாள். இந்த சிறுமி பள்ளி ஒன்றில் படித்து வந்தாள். நாராயண் மற்றும் சைமா பல் டாக்டர்கள் ஆவார்கள். சைமாவின் சொந்த ஊர் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை ஆகும். இந்த தம்பதி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்திருந்தனர்.

திருமணத்திற்கு பின்பு நாராயண் மற்றும் சைமா ஆகியோர் பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்தனர். இந்த நிலையில், நாராயண் வழக்கம் போல தான் நடத்திய வரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வராததால், அவரது செல்போனுக்கு பல முறை நாராயண் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் சைமா தனது செல்போனை எடுத்து பேசவில்லை.

தூக்கில் தொங்கினார்கள்

இதன் காரணமாக சந்தேகம் அடைந்த நாராயண், வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பனசங்கரி போலீசார் விரைந்து வந்து தாய், மகளின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சைமா, பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாராயண், சைமா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சிறிய சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து தனது மகளை கொன்று, சைமா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் சைமா சாவில் சில சந்தேகங்கள் இருப்பதாக போலீசாரிடம் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

கணவரிடம் விசாரணை

இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சைமாவின் கணவரான டாக்டர் நாராயணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பல் டாக்டரான சுஷ்மா தனது குழந்தையை 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்திருந்தார். தற்போது மற்றொரு பல் டாக்டர் ஒருவர் தனது மகளை கொன்று, தானும் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story