'கியூட்' நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


கியூட் நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2022 12:54 AM GMT (Updated: 5 Aug 2022 12:55 AM GMT)

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (கியூட்) 2 கட்டங்களாக நடத்தப்படும்.

சென்னை:

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடந்தது.

அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 2 ஷிப்டுகளில் தேர்வு நடக்கிறது. இதில் முதல் 'ஷிப்ட்'டில் நடந்த தேர்வில், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள சில மையங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும், மேலும் பிற்பகலில் 2-வது ஷிப்ட்டில் (3 மணி முதல் 6 மணி வரை) நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.

இவற்றில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகிற 12-ந்தேதியும், ரத்து செய்யப்பட்ட தேர்வு 12 மற்றும் 14-ந்தேதிக்கு இடைபட்ட நாட்களிலும் நடத்தப்படும் என்றும், இந்த தேர்வர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால்டிக்கெட்டை கொண்டு இந்த தேர்வை எழுத முடியும் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story