நாசவேலைக்கு இளைஞர்களை தேர்வு செய்த 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை - டெல்லி கோர்ட்டு உத்தரவு


நாசவேலைக்கு இளைஞர்களை தேர்வு செய்த 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை - டெல்லி கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

நாடு முழுவதும் நாசவேலைக்கு இளைஞர்களை தேர்வு செய்த 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சஜத் அகமது கான், பிலால் அகமது மிர், முசாபர் அகமது பட், இஷ்பக் அகமது பட், மெராஜ் உத் தின் சோபன், தன்வீர் அகமது கானி.

இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்ட அவர்கள் இந்தியாவுக்கு வந்து நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குகளுக்கான தனிக்கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி சைலேந்தர் மாலிக் நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தன்வீர் அகமது கானி தவிர்த்து, மீதி 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தன்வீர் அகமது கானிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


Next Story