நுபுர் சர்மாவுக்கு ஆதரவான வாட்ஸ்-அப் பதிவாலேயே மருந்துக்கடைக்காரர் உமேஷ் படுகொலை - என்ஐஏ பகீர் தகவல்


நுபுர் சர்மாவுக்கு ஆதரவான வாட்ஸ்-அப் பதிவாலேயே மருந்துக்கடைக்காரர் உமேஷ் படுகொலை - என்ஐஏ பகீர் தகவல்
x

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக அமராவதி மருந்துக்கடைக்கார் உமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

மும்பை,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது.

அதேவேளை, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கும் உள்ளாகினர்.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கன்னையா லாலை கொலை செய்வதை வீடியோவாக எடுத்து அதை கொலையாளிகள் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்த மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே (வயது 54) கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உமேஷ் கோல்கே கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பியபோது அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் உமேஷை கழுத்தற்றுத்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக, முபஷீர் அகமது, ஷாரூக் கான், அப்துல் தவ்ஷப் ஷேக், முகமது ஷோயப், அதிப் ரஷீத், யூசப் கான், இர்பான் கான், அப்துல் அப்பாஸ், முஸ்பிக்யூ அகமது, ஷேக் ஷகீல், ஷஹிம் அகமது ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கு முதலில் திருட்டு தொடர்பான கொலை என்று பேசப்பட்ட நிலையில் ராஜஸ்தான் தையல் கடைக்காரர் கொலை போன்ற பாணியில் இருந்ததால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், நுபர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாலேயே மருந்துக்கடைக்கார் உமேஷ் கோல்கே கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கொலைக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

உமேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி யூசப் கான். டாக்டரான யூசப் கானுக்கும், மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கேவும் பல ஆண்டு நண்பர்கள். யூசப்பிற்கு உமேஷ் சில நேரங்களில் பண உதவிகளும் வழங்கியுள்ளார்.

யூசப் கான் அட்மினாக உள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் உமேஷ் கோல்கே இருந்துள்ளார். அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உமேஷ் கோல்கே, நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வாட்ஸ்-அப் பதிவே உமேஷ் கோல்கே கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

உமேஷ் கோல்கே பதிவு செய்த அந்த பதிவை யூசப் கான் 'ரஹிபரியா' என்ற குரூப்பில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது நண்பர்கள் ஷேக் இர்பான், பிறர் மனதில் உமேஷ் குறித்து வெறுப்புணர்வை வளர்த்துள்ளார்.

இதையடுத்து, ஷேக் இர்பான் தான் நடத்தி வந்த தொண்டு நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்த நபர்களை உமேஷை கொலை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார்.

பின்னர், திட்டமிட்டபடி உமேஷ் கோல்கே தனது மருந்துக்கடையை மூடிவிட்டு இரவு வீட்டிற்கு சென்றபோது அவரை பின் தொடந்து வந்த கும்பல் அவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

வாட்ஸ்-அப் குரூப்பில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாலேயே மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story