சந்திரசேகர ராவ் அரசு உருப்படியான எந்த வேலையும் செய்யவில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு


சந்திரசேகர ராவ் அரசு உருப்படியான எந்த வேலையும் செய்யவில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு
x

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள் என்று உள்துறை மந்திரி அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ஐதராபாத் சோமாஜிகுடாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் (தெலுங்கானா மக்கள்) வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கட்சிகளையும் ஆய்வு செய்தவுடன் நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது.

சந்திரசேகர ராவின் 10 ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலுங்கானா மாநிலம் தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதை காண்கிறோம். இங்கு இளைஞர்கள் மனமுடைந்து போயுள்ளனர். விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி, ஊழல் செய்ததைத் தவிர மக்களுக்கு உறுதியான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எனவே இந்த தேர்தலில் பிஆர்எஸ் அரசை வீழ்த்த தெலுங்கானா மக்கள் தயாராக உள்ளனர்.

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முந்தைய ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story