காவிரி நீரை திறந்து விடுவது கடினம் - டி.கே.சிவக்குமார் பேட்டி


காவிரி நீரை திறந்து விடுவது கடினம் -  டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 25 Sep 2023 7:05 AM GMT (Updated: 25 Sep 2023 7:29 AM GMT)

கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் (காவிரி) நீர் திறப்பது கடினம், ஆனால் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும். எதுவாக இருந்தாலும் மாநிலத்தின் நலன்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும். அதுவே எங்கள் கடமை என்றார்.


Next Story