பஞ்சாயத்து உறுப்பினர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் பஞ்சாயத்து உறுப்பினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள கஞ்சிமடா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் ஷெட்டி மொகரு (வயது 35). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த இவர் கஞ்சிமடா கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் இன்சூரன்ஸ் ஏஜெண்டாகவும் பணியாற்றி வந்தார். சந்தீப் வங்கி மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், போதிய வருமானம் இல்லாததால் அவரால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு சந்தீப்புக்கு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் சந்தீப்பை காணவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நீர்மார்காவில் உள்ள கட்டீல் ஈஸ்வரி சேவா சிந்து அலுவலகத்தில் சந்தீப் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பஜ்பே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சந்தீப் சட்டையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.